ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் இலங்கையிலுள்ள சிறு விவசாய குடும்பங்களிலுள்ள பெண்களின் பொருளாதார நல்வாழ்வை மேம்படுத்தும் வகையில் சுமார் 1,175 மில்லியன் ரூபாவினை (கிட்டத்தட்ட 3.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை) நன்கொடையாக வழங்குகிறது
2023/4/24

இலங்கயின் கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்த்தன, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அதிமேதகு திரு. மிசுகொசி கிடியாக்கி இ ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி திருமதி அசுஸ்ஸா குபொட்டா ஆகியோர் ஒன்றிணைந்து இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ளும் முகமாக இரு புதிய வாழ்வாதார நிகழ்ச்சித் திட்டங்களை ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி அலரி மாளிகையில் அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.
தற்போதைய சமூக பொருளாதார நெருக்கடியானது இலங்கையின் விவசாயத் துறையில் பாரியளவிலான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையானது அதிகரித்து வரும் எரிசக்தி மூலப்பொருட்களுக்கான செலவுகள் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக மேலும் தீவிரமடைந்து சென்றுள்ளது. இந்த நிலைமையினை எதிர்கொள்வதற்காக ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தினூடாக இலங்கை மதிப்பில் சுமார் 1,175 மில்லியன் ரூபா (கிட்டத்தட்ட 3.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) பெறுமதியான உதவியினை இலங்கையிலுள்ள உலர் வலய மாவட்டங்களில், குறிப்பாக வட மத்தி, வட மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெண்களினுடைய பொருளாதாரத்தை வலுப்படுத்தி பசுமை விவசாய தொழிநுட்ப முறைமையினை அடையும் நோக்கில் உதவிகளை வழங்கும்.
ஜப்பானிய துணை வரவு செலவுத் திட்டத்தின் கீழான நிதியுதவியில், இலங்கை அரசாங்கம் மற்று இதர பங்குதாரர்களுடன் இணைந்து செயற்படுத்தப்படும் இந்த நிகழ்ச்சித் திட்டமானது இரு பெரும் நோக்கங்களை அடைவதை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது: முதலாவதாக பெண்கள் தலைமை தாங்கும் சிறு மற்றும் நடுத்தர வியாபார முயற்சிகளினூடாக அவர்களின் வாழ்வாதாரங்களை பன்முகப்படுத்தி தொழில் முனைவோர் திட்டங்களை அறிமுகப்படுத்துவதும், இரண்டாவது நோக்காக கிராமப்புற விவசாய பொருளாதார மறுமலர்ச்சி மூலம் உணவுப் பாதுகாப்பை வலுவடையச் செய்தலும், அதுனூடாக புதிய சந்தை வாயப்புகளை உருவாக்கி, மதிப்பு மற்றும் விநியோகச் சங்கிலியை மேம்படுத்தி, பசுமை விவசாய தொழிநுட்பத்தினால் உற்பத்தி மற்றும் செயல் திறனை அதிகரித்தல் ஆகும்.
இலங்கையின் வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 132,000 மறைமுகப் பயனாளிகளை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் மொத்தமாக 58,000 பெண்கள் மற்றும் இளம் சமுதாயத்தினர் நேரடியாக பயன்பெறுவர்.

இந்த திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் முகமாகவும் ஜப்பானிய அரசாங்கத்தின் உதவிகளை அங்கீகரிக்கும் வகையிலும் நிகழ்ச்சித்திட்ட ஆரம்ப நிகழ்வானது பிரதம மந்திரி கௌரவ. தினேஷ் குணவர்த்தன, இலங்கைக்கான ஐப்பான் நாட்டுத் தூதுவர் மிசுகொஷி கிடியாக்கி, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி திருமதி அசுஸ்ஸா குபொட்டா, ஐப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) பிரதம பிரதிநிதி திரு. டெட்சுயா யமாட்டா, விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ. மஹிந்த அமரவீர, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கௌரவ காஞ்சன விஜேசேகர மற்றும் சிரேஷ்ட அரச உயரதிகாரிகள் மற்றும் அபிவிருத்திப் பங்காளிகளின் பங்குபற்றுதலுடன் இன்று இனிதே ஆரம்பமானது.
இந்த நிகழ்வில் பங்குபற்றி உரையாற்றிய பிரதம மந்திரி "சமூக பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக ஜப்பான் அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தினால் வழங்கப்பட்ட தொடர்ச்சியான உதவிகளையும் ஆதரவினையும் இலங்கை அரசாங்கம் மிகவும் பாராட்டுகின்றது. மேலும் நாட்டின் பொருளாதார கட்டமைப்பிற்கு முக்கியமான இரு துறைகளான உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பான இலங்கையை உருவாக்க இது ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்” என சுட்டிக்காட்டினார்.
நெருக்கடியின் போதான மீட்பு முயற்சிகளில் இலங்கை மக்களுக்கான ஜப்பானிய உதவிகளை எடுத்துரைத்த இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி "இலங்கையிலுள்ள பெண்களின் சமூக மற்றும் பொருளாதார வலுவூட்டலுக்காக ஜப்பான் அரசாங்கமானது இலங்கை அரசாங்கம் மற்றும் துறை சார் ஐ.நா நிறுவனங்களுடன் இணைந்து தொடர்ச்சியாக உதவிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக பெண்களுக்கான தேசிய செயல் திட்டம் மற்றும் பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு பற்றிய விடயங்களையும் சுட்டிக்காட்டலாம் எனக் குறிப்பிட்டார். மேலும் கருத்துரைத்த அவர் இந்த புதிய நிகழ்ச்சித் திட்டமானது பாதிக்கப்டக்கூடிய நிலையிலுள்ள சமூகங்களின் வாழ்வை மேம்படுத்தும் என நம்புவதோடு, குறிப்பாக இத்தருணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் தேவைகளையும் நாம் அங்கீகரிக்கின்றோம். UNDP இன் நிபுணத்துவம் மற்றும் JICA இன் தொழில்நுட்ப உதவி ஆகியவற்றுடன் வாழ்வாதாரம் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை ஆதரிப்பதற்கான நேர்மறையான ஒருங்கிணைப்பை உருவாக்க இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்."

பங்குதாரர்களை உரிய நேரத்தில் ஒன்றிணைப்பதில் UNDP இன் பங்கு பற்றிக் கருத்துரைத்த UNDP இன் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி திருமதி. அசுஸ்ஸா குபொட்டா "தற்போதைய நிலையானது சவால் மிக்கதென்பதோடு இவற்றை வெற்றி கொள்ள பல கூட்டாண்மைகளின் மூலம் பலதரப்பட்ட தீர்வுகள் தேவைப்படும் காலமாகும். இங்கு அமர்ந்திருக்கும் பலதரப்பட்ட பங்குதாரர்களினால் நிரூபனம் செய்யப்பட்ட அர்ப்பணிப்புக்களுக்கு நான் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளேன். சமூகங்களிலுள்ள பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக் கூடிய பிரிவினர்களின் தேவைகளை கண்டறிந்து, அதிலும் குறிப்பாக பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு, அவற்றை நிவர்த்தி செய்ய நாம் கை கோர்க்க வேண்டும், இவற்றில் முதலீடு செய்வதன் மூலம் அதன் விளைவுகளையும் நீண்ட கால பலன்களும் குடும்பங்களுக்கு சமூகத்துக்கும் புலப்படும்” என்று சுட்டிக் காட்டினார்.