உணவு மற்றும் வலுப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் தனது அர்ப்பணிப்பை ஜப்பான் மீளுறுதி செய்துள்ளது
2024/2/16


புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாய அமைப்புகளுக்கு சூரிய வலுவில் இயங்கும் ஸ்பிரேயர்கள், நீர் பம்பிகள் மற்றும் குளிர வைக்கும் அறைகள் போன்ற புதுப்பிக்கத்தக்க வலுவில் இயங்கும் தொழில்நுட்பங்களை கையளிக்கும் நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி கலந்து கொண்டார். இந்நிகழ்வு பெப்ரவரி 15ஆம் திகதி நடைபெற்றது.
.

“இலங்கையின் பின்தங்கிய சிறியளவிலான விவசாயிகளிடையே பரந்தளவு மேம்படுத்தலுக்காக பசுமைத் தொழில்நுட்பங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலு ஆகியவற்றை ஊக்குவிப்பதனூடாக உணவு மற்றும் வலுப் பாதுகாப்பை மேம்படுத்தல்” எனும் திட்டத்தினூடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்துக்கு ஜப்பானிய அரசாங்கம் நிதி உதவிகளை வழங்கியிருந்ததுடன், UNDP இனால் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. வலுத் தட்டுப்பாட்டுக்கு முகங்கொடுத்துள்ள விவசாயத் துறைக்கு இந்தத் திட்டம் உதவிகளை வழங்கும் என்பதுடன், புதுப்பிக்கத்தக்க வலுவை பயன்படுத்தி உணவு மற்றும் வலுப் பாதுகாப்பை மேம்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது. 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.


சிறிய மற்றும் நடுத்தரளவு விவசாயிகளின் நிலைபேறான அபிவிருத்திக்கு இந்த உதவியினூடாக பயன் கிடைக்கும் என தாம் எதிர்பார்ப்பதாக தூதுவர் மிசுகொஷி தெரிவித்ததுடன், உலகளாவிய சூழலை கவனத்தில் கொண்டு, நிலைபேறான விவசாயத்தின் முக்கியத்துவத்தை விவசாயிகள் ஆழமாக புரிந்து கொள்ள உதவியாக அமைந்திருக்கும் எனவும் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார். அதனூடாக இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலு பயன்பாட்டை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதாக அமைந்திருக்கும். இலங்கையின் விருத்திக்கு அவசியமான ஆதரவைப்பெற்றுக் கொடுப்பதற்கான தமது அர்ப்பணிப்பை அவர் வெளிப்படுத்தியதுடன், இலங்கையுடன் ஜப்பான் நீண்ட காலமாக கொண்டிருக்கும் நட்பை மேலும் கட்டியெழுப்பவும் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.
