வட மாகாணத்தின் கூட்டுறவு சங்கங்களின் வசதிகளை மேம்படுத்த மருந்துப் பொருட்கள் மற்றும் பாலுற்பத்தி வசதிகளுக்கு ஜப்பான் ஆதரவு

2024/3/11
வட மாகாணத்தின் இரு கூட்டுறவு சங்கங்களுக்கு “Grant Assistance for Grassroots Human Security Projects (GGP)” திட்டத்தின் கீழ் மானிய உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கான உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி, மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் தலைவர் ஏ.என்.மனுநீதி மற்றும் கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் வி.கேதீஸ்வரன் ஆகியோருடன் கைச்சாத்திட்டிருந்தார். இந்நிகழ்வு 2024 மார்ச் 11ஆம் திகதி நடைபெற்றது.

இந்த இரண்டு திட்டங்களுக்கும் ஜப்பானிய அரசாங்கம் மொத்தமாக 103,924 அமெரிக்க டொலர்களை (அண்ணளவாக ரூ. 32 மில்லியன்) வழங்கியுள்ளது. அதனூடாக வடக்கு மாகாணத்தில் மருத்துவ மற்றும் கால்நடை வசதிகளை மேம்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.
 
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மேம்படுத்துவது என்பது இலங்கைக்கான ஜப்பானிய உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவிக் கொள்கையில் பிரதானமாக கவனம் செலுத்தப்படுகின்றது. நாட்டில் சமாதான கட்டியெழுப்பல் மற்றும் ஒருமைப்பாடு தொடர்பான செயற்பாடுகளுக்கு ஜப்பானிய அரசாங்கம் உதவிகளை வழங்குகின்றது. குறிப்பாக வடக்கு மாகாணத்தில் இது போன்ற பல்வேறு உதவித் திட்டங்களினூடாக இதை முன்னெடுக்கின்றது.

தூதுவர் மிசுகொஷி குறிப்பிடுகையில், சமூக சேவை உட்கட்டமைப்பு மேம்படுத்தல், தனிநபர்களுக்கு பயனளித்தல் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் காணப்படும் பிரதான தொழிற்துறைகளின் நிலைபேறாண்மை போன்றவற்றுக்கு இந்த திட்டங்களினூடாக மேற்கொள்ளப்படும் பங்களிப்பு தொடர்பில் தெளிவுபடுத்தியிருந்தார். மேலும், வட மாகாணத்திலுள்ள பரந்த இன மற்றும் மத குழுக்கள் மத்தியில் இதுபோன்ற செயற்பாடுகளினூடாக சுபிட்சம் ஊக்குவிக்கப்படும் எனவும், அழகிய நாட்டின் நீண்ட கால உறுதித் தன்மை மற்றும் சுபிட்சத்துக்கு இது முக்கியமானது என்பதையும் குறிப்பிட்டார்.

இந்த மானிய ஒதுக்கீடு தொடர்பில் குறிப்பிடுகையில், மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் தலைவர் ஏ.என.மனுநீதி குறிப்பிடுகையில்;

 “மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை லிமிடெட்டின் தலைவர் எனும் வகையில், குழந்தைப்பேறு சிகிச்சைப் பகுதி மற்றும் தாய்சேய் சிகிச்சைப் பகுதியை மறுசீரமைப்பு செய்வதற்கு ஜப்பானிய தூதரகத்தின் இந்த உதவிக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன். எமது மருத்துவ சிகிச்சைகளில் மிகவும் புகழ்பெற்ற சேவையாக தாய்சேய் சிகிச்சை சேவை அமைந்துள்ளது. எமக்கு அருகாமையிலுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி, தூரப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களும் இந்த சேவையை பெற்றுக் கொள்வதற்காக எமது வைத்தியசாலைக்கு விஜயம் செய்கின்றனர். எவ்வாறாயினும், கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட உள்ளக குழப்ப நிலைகள் காரணமாக, வைத்தியசாலை கட்டடங்கள் சேதமடைந்ததுடன், மருத்துவ சாதனங்களும் அழிக்கப்பட்டன. எனவே, இந்த சேவையை தொடர முடியாதுள்ளது.”

கடந்த ஆண்டில் எமது வைத்தியசாலைக்கு இரு மறுசீரமைக்கப்பட்ட நோயாளர் காவு வண்டிகளை நன்கொடையாக வழங்கியிருந்தமைக்காக ஜப்பானிய தூதரகத்துக்கு இந்த சந்தர்ப்பத்தில் நாம் நன்றி தெரிவிக்கின்றோம். அதனூடாக எம்மால் அவசர சிகிச்சை சேவைகளை முன்னெடுக்க முடிகின்றது. இந்த இரு நோயாளர் காவு வண்டிகளின் சேவைகளை நோயாளர்கள் பெற்றுக் கொள்வதன் காரணமாக, இந்த வைத்தியசாலையின் நற்பெயர் மேலும் உயர்ந்துள்ளது. வைத்தியசாலையின் பணிப்பாளர் சபை, வைத்தியசாலை சமூகம் மற்றும் பிராந்தியத்தின் மக்கள் சார்பாக, ஜப்பானிய அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவிக்கின்றோம்.”

கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் வி.கேதீஸ்வரன் குறிப்பிடுகையில்;

“எமது வசதிகளை மேம்படுத்துவதற்கு அவசியமான நிதி உதவிகளை வழங்கியிருந்தமைக்காக ஜப்பானிய அரசாங்கத்துக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம். இதனூடாக விற்பனை நிலையமொன்றை நிறுவியிருந்தமை மற்றும் பதப்படுத்தல் நிலையங்களுக்கு புதிய சாதனங்களை வழங்கி மேம்படுத்தியிருந்தமை போன்றவற்றை மேற்கொள்ள முடிந்தது. இதனூடாக எமது பாற்பண்ணை குடும்பங்கள் பயன்பெறுவதுடன், பிராந்தியத்தின் சிறுவர்களின் போஷாக்கு மட்டத்தை மேம்படுத்த முடியும். இந்தத் திட்டத்தினூடாக பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடியதாகவும் உள்ளது.

நாட்டில் நிலவிய யுத்தத்தினால் பெருமளவில் பாதிக்கப்பட்ட பிரதேசமாக கிளிநொச்சி அமைந்திருந்ததுடன், இடம்பெயர்வுகள் காரணமாக, மனிதர்களைப் போன்று கால்நடைகளும் பாதிக்கப்பட்டிருந்தன. கடினமான சூழ்நிலையிலும், கிளிநொச்சியை சேர்ந்த விவசாயிகள், தமது பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதுடன், விவசாய செயன்முறைகளை நவீனமயப்படுத்துவதிலும் அக்கறை கொண்டுள்ளனர். பால் சேகரிப்பு மற்றும் சிறியளவு பால் பெறுமதி சேர்ப்பு பதப்படுத்தல் மற்றும் விற்பனை போன்றவற்றில் 20 வருடங்களுக்கு மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள இந்த சங்கத்தினூடாக, இந்தத் திட்டம் பூர்த்தியடைந்ததும், பால் சேகரிப்பை ஆகக்குறைந்தது 80% இனால் அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தை ஆரம்பிக்கவும், ஜப்பானிய தூதரகத்துடன் தொடர்பை ஏற்படுத்தவும் உதவியிருந்த தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்துக்கு நன்றி தெரிவிக்கின்றோம். தொழில்நுட்ப வழிகாட்டல்கள் மற்றும் தொடர்ச்சியாக ஆதரவு வழங்கியிருந்தமை போன்றவற்றுக்காக விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம், கூட்டுறவு விருத்தி திணைக்களம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலகம் போன்றவற்றின் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிக்கின்றோம்.”