வட மாகாணத்தில் கண்ணிவெடி அகற்றும் மனிதநேய செயற்பாடுகளுக்கு ஜப்பான் ஆதரவு தொடர்கின்றது

2024/8/22

கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு “Grant Assistance for Grassroots Human Security Projects (GGP)” திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேயகி, Skavita Humanitarian Assistance and Relief (SHARP) இன் பணிப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் திரு. சுமதி ரஞ்ஜன் பாலசூரிய மற்றும் Delvon Assistance for Social Harmony (DASH) அமைப்பின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் திரு. ஆனந்த சந்திரசிறி ஆகியோருடன் கைச்சாத்திட்டிருந்தார். இந்நிகழ்வு 2024 ஆகஸ்ட் 22 ஆம் திகதி நடைபெற்றது.
 
இலங்கையின் வட மாகாணத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவை விரிவுபடுத்துவதற்காக ஜப்பான் அரசாங்கம் இந்த இரண்டு திட்டங்களுக்காக மொத்தம் 1,007,194 அமெரிக்க டொலர்களை (சுமார் ரூபா. 300 மில்லியன்) வழங்கியுள்ளது. 2002 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஜப்பான் ஒரு பிரதான நன்கொடையாளராக உள்ளதுடன், மொத்த உதவித் தொகை 46 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.
 
SHARP மற்றும் DASH இன் இந்தத் திட்டங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மொத்தம் 6,304 பயனாளிகளுக்கு மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதார உதவிக்கு பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
போர்காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்தியானது, இலங்கைக்கான ஜப்பானின் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவிக் கொள்கையின் முன்னுரிமைப் பகுதிகளில் ஒன்றாகும்.


கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் முன்னணி நன்கொடையாளராக ஜப்பான் அரசாங்கம் தனது பங்களிப்பை ஆற்றி வருவதாகவும், கண்ணிவெடி பாதிப்பு இல்லாத இலங்கையை அடைவதற்குத் தேவையான ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் என்றும் தூதுவர் MIZUKOSHI உறுதியாக வலியுறுத்தினார்.
 
இந்த உதவித்தொகை வழங்குவது குறித்து கருத்து தெரிவிக்கையில்,
SHARP இன் பணிப்பாளர் திரு. சுமதி ரஞ்ஜன் பாலசூரிய கூறினார்;
 
" 2016 ஆம் ஆண்டில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் தொடங்கியதிலிருந்து இன்றுவரை SHARP மீது வைத்துள்ள நம்பிக்கைக்காக ஜப்பானிய தூதரகத்திற்கு SHARP மிகவும் நன்றியுள்ளதாகவும் ஆழ்ந்த பாராட்டுதலுடனும் உள்ளது.
 
ஜூலை 2024 நிலவரப்படி, ஜப்பான் அரசாங்கத்தின் மானிய உதவிகளினூடாக, SHARP மொத்தம் 2,846,650m2 நிலங்களை கண்ணிவெடி அகற்றி விடுவித்து மற்றும் 11,889 நபர்களை தாக்கும் கண்ணிவெடிகள், 169 தாங்கி தகர்ப்பு  கண்ணிவெடிகள், 4,666 வெடிக்காத வெடிபொருட்கள் மற்றும் 57,773 க்கும் மேற்பட்ட சிறிய ஆயுத வெடிமருந்துகளை மீட்டுள்ளது. இதில் 3,318 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயனடைந்துள்ளன. SHARP நிறுவனத்தால் துப்புரவு செய்யப்பட்ட மொத்த நிலங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை ஜப்பானின் உதவியாகும்.
கண்ணியத்துடன், வினைத்திறனான வகையில் ஜப்பானிய தூதரகத்தின் முழு ஆதரவுடன் தமது செயற்பாடுகளை SHARP முன்னெடுக்கும். வழங்கப்படும் நிதிக்கு முழுமையாக பொறுப்புக்கூறலை வெளிப்படுத்தி, எமது அனுசரணையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் செயலாற்றுவோம்.

SHARP இன் அங்கத்தவர்களின் மனமார்ந்த நன்றியை ஜப்பானிய மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம். முக்கியமாக, நாட்டில் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்கும் ஜப்பானிய தூதரகத்தின் செயற்பாடுகளுக்கும், நாட்டு மக்களின் நலனில் அக்கறை காண்பிக்கின்றமைக்காகவும் நன்றி தெரிவிக்கின்றோம்.” என்றார்.


இந்த நன்கொடையை பெற்றுக் கொள்வது தொடர்பில் திரு. ஆனந்த சந்திரசிறி குறிப்பிடுகையில்:

"7 தசாப்தங்களுக்கும் மேலாக ஜப்பான் இலங்கைக்கு அரிய உதவிகளை வழங்கிவந்துள்ளது. 2002 ஆம் ஆண்டில் இலங்கையின் தேசிய கண்ணிவெடி அகற்றும் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் ஜப்பான் பிரதான ஆதரவாளராக இருந்து வந்துள்ளதுடன், ஜப்பானின் நிதியுதவியுடன் எமது நிறுவனமான DASH 2010 ஆம் ஆண்டில் அதன் செயற்பாடுகளை ஆரம்பித்தது. ஜப்பானுக்கும் அதன் மக்களுக்கும் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோம்.

ஆகஸ்ட் 2024 நிலவரப்படி, ஜப்பான் அரசாங்கத்தின் மானிய உதவிகளினூடாக, DASH மொத்தம் 7,546,16m2 நிலங்களை கண்ணிவெடி அகற்றி விடுவித்து மற்றும் 55,907 நபர்களை தாக்கும் கண்ணிவெடிகள், 113 தாங்கி தகர்ப்பு  கண்ணிவெடிகள், 14,073 வெடிக்காத வெடிபொருட்கள் மற்றும் 77,004 க்கும் மேற்பட்ட சிறிய ஆயுத வெடிமருந்துகளை மீட்டுள்ளது, இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 110,842 பேர் பயனடைந்துள்ளனர்.


1983 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் 26 ஆண்டுகால நீண்டகால உள்நாட்டு மோதலின் விளைவாக அதிகம் அறியப்படாத ஒரு சோகம் வடக்குப் பகுதிகளில் காணப்படும் கண்ணிவெடி மற்றும் போரின் வெடிக்கும் எச்சங்கள் ( Explosive Remnants of War - ERW) ஆகும்.  அதன் பெரும்பகுதி தற்போது அகற்றப்பட்டிருந்தாலும், இலங்கையை கண்ணிவெடி மற்றும் ERW இல்லாத நாடாக மாற்ற இன்னும் சில ஆண்டுகள் ஆகும். ஜப்பான் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட DASH இன் கருத்திட்டங்கள், மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான பாதுகாப்பிற்கும் நிலையான பொருளாதாரத்தை மீள ஸ்தாபிப்பதற்கும் அவர்களின் பிரதேசங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கும் வலுவாக பங்களிப்பு செய்துள்ளது.’’ என்றார்.