வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் தனது ஆதரவை வழங்குகிறது

2026/5/27

மே 27, 2026 அன்று, ஜப்பான் தூதர் அதிமேதகு திரு. அகியோ இசொமட்டா, “அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான மானிய உதவி (GGP)” திட்டத்தின் கீழ் கண்ணிவெடி அகற்றும் திட்டத்திற்கான மானிய ஒப்பந்தங்களில் கண்ணிவெடி ஆலோசனைக் குழுவின் (MAG) உதவி சேவைகள் தலைவர் திரு. கேவின் கிளெர்க்ஸ் மற்றும் ஹாலோ அறக்கட்டளையின் (Halo Trust) திட்ட மேலாளர் ஹன்னா எலிசபெத் பிக்டன் மற்றும் டெல்வோன் சமூக நல்லிணக்கத்திற்கான உதவியின் (DASH) இயக்குநர் மற்றும் திட்ட மேலாளர் திரு. ஆனந்த சந்திரசிறியுடன் கையெழுத்திட்டார்.


ஜப்பான் அரசு இந்த திட்டங்களுக்கு USD 1,343,202 (சுமார் ரூ. 400 மில்லியன்கள்) வழங்கியுள்ளது. இதை MAG, HALO Trust மற்றும் DASH ஆகிய நிறுவனங்கள் இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமது மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த உள்ளன. இந்த புதிய திட்டங்களின் கீழ், சுமார் 400,000 சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமான நிலம் கண்ணிவெடி இல்லாததாக மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 3,100க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் நிலங்களுக்கு திரும்பவும், சுற்றியுள்ள பகுதிகளின் சுமார் 22,000 மக்கள் தங்கள் பொருளாதார நடவடிக்கைகளை விரிவுப்படுத்தவும் உதவும். 2002 முதல் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஜப்பான் ஒரு முக்கிய நன்கொடையாளராக இருந்து வருகிறது, மேலும் மொத்த உதவி 49 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாகும்.
 
இந்த மூன்று அரசசார்பற்ற நிறுவனங்களின் அர்ப்பணிப்பு மற்றும் அயராத முயற்சிகளுக்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, தூதர் இசொமட்டா பேசும் போது: “இன்று மூன்று (3) மானிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது இலங்கை மக்களுக்கு, குறிப்பாகக் கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொடர்ந்தும் உதவ முயற்சிக்கும் ஜப்பானின் உறுதிக்கு மற்றொரு சான்று. அதே நேரத்தில், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சமூகங்கள் சமூக-பொருளாதார வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு பிரச்சினையின்றி முன்னேறுவதற்கும் வாழ்வாதாரங்களை மேம்படுத்தவும் மற்றும் தேவையான உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தவும் நாங்கள் எமது உதவிகளை வலுப்படுத்தியுள்ளோம். இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பானின் உதவியானது ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையிலான நம்பிக்கையையும் வலுவான நட்பையும் மேலும் வலுப்படுத்தும் என நம்புகிறேன்” என்றார்.

இந்த மானிய உதவி பெறுவது குறித்து கருத்துத் தெரிவித்த கண்ணிவெடி ஆலோசனைக் குழுவின் (MAG) உதவி சேவைகள் தலைவர் திரு. கேவின் கிளெர்க்ஸ், இவ்வாறு கூறினார். “சுமார் 23 ஆண்டுகளாக, ஜப்பான் அரசின் நீண்டகால ஆதரவுடன், MAG இலங்கையில் கண்ணிவெடிகள் மற்றும் போரின் வெடிபொருள் எச்சங்களின் ஆபத்தைக் குறைக்க உதவியாக இருந்துள்ளது. இந்த உதவியால் MAG 3.9 மில்லியன் சதுர மீட்டர்களுக்கு மேலான நிலத்தை விடுவிக்கவும் ஆயிரக்கணக்கான வெடிப்பொருட்களை அழிக்கவும் முடிந்துள்ளது.”
 
இந்த மானிய உதவி பெறுவது குறித்து கருத்துத் தெரிவித்த ஹாலோ அறக்கட்டளையின் (Halo Trust) திட்ட மேலாளர் ஹன்னா எலிசபெத் பிக்டன், இவ்வாறு கூறினார். “HALO Trust ஜப்பான் அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவிற்க்கு மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறது. Halo 303,000 இற்கும் மேலான கண்ணிவெடிகளை அகற்றியதுடன், 121 சதுர கிலோமீட்டர்களுக்கு மேலான நிலத்தை விடுவித்துள்ளது. வட மாகாணத்தில் 185,000க்கும் மேலான இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேர உதவியுள்ளதுடன், சமூகங்கள் தமது வாழ்வாதாரங்களை மீளக்கட்டியமைக்கவும் மறுசீரமைக்கவும் உதவியுள்ளது.”


இந்த மானிய உதவி பெறுவது குறித்து கருத்துத் தெரிவித்த டெல்வோன் சமூக நல்லிணக்கத்திற்கான உதவியின் (DASH) இயக்குநர் மற்றும் திட்ட மேலாளர் திரு. ஆனந்த சந்திரசிறி இவ்வாறு கூறினார். “DASH 8.1 சதுர கிலோமீட்டர் நிலத்தை விடுவித்து, ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் மற்றும் போரின் வெடிபொருள் எச்சங்களை அழித்து, சுமார் 195,000 மக்களுக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பயனளித்துள்ளது. இந்தத் திட்டம் 110,000 சதுர மீட்டர் நிலத்தை விடுவிக்கவும் பாதுகாப்பு, வாழ்வாதாரம், பாதைகள், உட்கட்டுமானம் மற்றும் மீள்குடியேற்றத்தை மேம்படுத்தவும் உதவும்.”